செவ்வாய், 25 நவம்பர், 2014

ஓவியாவின்பள்ளிக்கூட அனுபவங்கள் – 7 (கல்விச் சுற்றுலா)



ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)

இங்கு எல்லா பள்ளிக்கூடங்களிலும் பாலர் வகுப்பிலேயே கல்விச் சுற்றுலாவை ஆரம்பித்து விடுகிறார்கள். ஓவியாவின் பள்ளியில் சென்ற மாதம், பாலர் வகுப்பு குழந்தைகளை மட்டும் இரண்டு பேருந்துகளில் “CALMSLEY HILL FARM” என்ற ஒரு பண்ணைக்கு கல்விச் சுற்றுலாக அழைத்து போயிருக்கிறார்கள்.  அன்றைக்கு காலையில் சரியாக 8.45மணிக்கு பள்ளிக்கு எல்லோரும் வர வேண்டும் என்று சொல்லி, ஒரு பிளாஸ்டிக் பையில் அவர்களுக்கு தேவையான நொறுக்குத் தீனி மற்றும் சாப்பாட்டை கொடுத்து விட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஓவியாவிற்கும் அவ்வாறே கொடுத்து 8.45மணிக்கெல்லாம், அம்மணி அவரை பள்ளிக்கு அழைத்து சென்றிருந்தார். அங்கு சரியாக 9மணிக்கு இரண்டு பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அந்த பண்ணைக்கு கிளம்பினார்கள். இரண்டு குழந்தைகளைத் தவிர மற்ற எல்லா குழந்தைகளின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம். வேண்டுமானால் பெற்றோரும் அவர்களுடன் செல்லலாம். என்ன ஒருவருக்கு $28 கட்ட வேண்டும். அன்றைக்கு மதியம் பள்ளி முடியும் நேரமான மூன்று மணிக்கு சுற்றுலாவை முடித்துவிட்டு பள்ளிக்கு திரும்பிவிட்டார்கள்.


(பேருந்தில் ஏறுவதற்காக செல்லுதல்)



(பேருந்துக்குள் அவரவர் விரும்பும் இருக்கைகளில் அமர்தல்)


(ஓவியாவின் சாப்பாட்டுப் பை)

ஓவியாவிடம், நீங்கள் அந்த சுற்றலா சென்று வந்ததை பற்றி ஓரிரு வரிகள் உங்களுக்குத் தெரிந்த படி, ஆங்கிலத்தில் எழுது என்று கூறினோம். அதற்கு அவருடைய கைவண்ணம் தான் கீழே உள்ள படம். அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். முதன்முதலாக இவ்வாறு வாக்கியமாக எழுதியதை, நாங்கள் திருத்த விரும்பவில்லை. அதில் என்ன என்ன தவறுகள் இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டினோம்.


(முதன் முதலில் வாக்கியமாக எழுதி, அதற்கு ஏற்ற படமும் வரைந்தது. தப்பாக எழுதிவிட்டால், அதன் மேல் ஒரு பெருக்கல் கூறி போட்டு, மேலே சரியானதை எழுத வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்)


அங்கு சென்று என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை, அவரிடம் கேட்டு, அவரின் பார்வையில் இனி எழுதுகிறேன்.



நாங்கள் அந்த பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், ஒரு லீடர் (Tour Guide) வந்து எங்களை கூட்டிக்கொண்டு போனார்கள். முதலில் ஒரு ஹாலில் உட்கார்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டோம். அப்புறம் நாங்க முதல்ல birds பார்த்தோம். அதுல parrotsம் இருந்துச்சு. அது “Hello Welcome to Farm” அப்படி பேசும்னு சொன்னாங்க. ஆனா அன்னைக்கு அது பேசலை. இரண்டு Snakes பார்த்தோம். அதுல ஒண்ணு தோல் உரிஞ்சிருந்தது,இன்னொன்னு தோலோட இருந்துச்சு. அப்புறம் நாங்க rabbits, goats எல்லாம் பார்த்தோம். Goatsயை நாங்கள் எல்லாம் தொட்டுப் பார்த்தோம். மாட்டுக்கிட்ட போய், அது பக்கத்துல உட்கார்ந்து, அதோட மடியிலிருந்து பால் கறந்தோம். அது ரொம்ப நல்லா இருந்துச்சு. மரத்து மேல இருந்த kualaவை பெஞ்ச் மேல ஏறி நின்னு பார்த்தோம். அப்புறம் நாங்க ஒரு sheepdog show பார்த்தோம். அந்த நாய் வந்து எல்லா sheepபையும் roundup பண்ணி ஒரு fenceக்குள்ள togetherரா இருக்க வச்சுது. அந்த லீடர் எங்களை அந்த ஹாலுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க. அங்க நாங்க லஞ்ச் சாப்பிட்டோம். அப்புறம் நாங்க sheepலேருந்து wool எடுக்கிற அந்த showவைப் பார்த்தோம். ஒரு அங்கிள் sheepபை upside downனா பிடிச்சு அதுக்கிட்டேயிருந்து wool எடுத்தாரு. அப்புறம் நாங்க திரும்பி பஸ்ல ஏறி ஸ்கூல்க்கு வந்துட்டோம்.














(இந்த படங்கள் அனைத்தும் - இணையத்திலிருந்து)


இது தான் அவர் என்னிடம் அன்றைக்கு அந்த சுற்றுலாவில் என்ன செய்தார்கள் என்று சொன்னது.




செவ்வாய், 11 நவம்பர், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 6 (பள்ளியில் செய்திகள் வாசிக்கும் நேரம்)



                                (படம் உதவி - கூகிள் ஆண்டவர்)



ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)


பள்ளிக்கூடத்தில் இப்போது கடைசி பருவம் (last term) நடந்து கொண்டிருக்கிறது. சென்ற பருவத்தில் (3rd term), ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் மாணவர்கள் ஒரு நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஓவியாவிற்கு செவ்வாய்க்கிழமையாக அமைந்திருந்தது. இதனை "நியூஸ் டைம்(news time)" என்று கூறுகிறார்கள். அந்த பருவம் ஆரம்பித்த முதல்வாரத்தில் இது சம்பந்தமான கடிதத்தை கொடுத்து விட்டார்கள். 

நாம் அவர்களுக்கு உதவி செய்து அவர்களை தயார் படுத்த வேண்டும். ஆனால் ஓவியாவைப் பொறுத்தவரையில்,நாங்கள் ரொம்பவும் கஷ்டப்படவில்லை. அவர்களை யோசிக்க சொல்லி, சிலவற்றை மட்டும் தமிழில் கூறினோம். அதனை அவர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துக்கொண்டு பேசியிருக்கிறார். 

கீழ்கண்ட தலைப்புகளில் ஒவ்வொரு வாரமும் அவர்கள் பேச வேண்டும். 

1. சென்ற விடுமுறையில் நான் என்ன செய்தேன்.
2. எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்
3. எனக்கு மிகவும் பிடித்த பொம்மை
4. என்னுடைய தோட்டத்திலிருந்து ஏதாவது ஒன்றை பற்றி பேசுதல்
5. பிற்காலத்தில் நான் என்னவாக வர விரும்புகிறேன் 
6. தாய்,தந்தை,தாத்தா,பாட்டி போன்றவர்களை பேட்டி காணுதல் - அவர்கள்      
   பெரியவர்களாக   ஆகும்   போது என்னவாக வர வேண்டும் என்று   
   விரும்பினார்கள்
7. நான் வீட்டில் எவ்வாறு உதவி செய்வேன் 
8. பெற்றோர்கள் குழந்தையாக இருக்கும்போது, அவர்களுக்கு மிகவும் பிடித்த 
   விளையாட்டு பொம்மை
9. இனி வரும் விடுமுறையில் நான் என்ன செய்வேன்






முதல் இரண்டு வாரமும், வீட்டு அம்மணி தான் அந்த தலைப்புகளை சொல்லி அவரை பேச வைத்து பார்த்திருக்கிறார். மூன்றாவது வாரத்தில் தான், நீ எப்படி வகுப்பில் பேசுவாய், அது மாதிரி பேசிக்காட்டு என்று கூறி, அதனை காணொளியாக எடுத்தேன். அந்த காணொளி தான் கீழே உள்ள காணொளி. 




பாலர் வகுப்புகளிலேயே, வெறும் படிப்பதோடு மட்டுமல்லாமல் இம்மாதிரியான ஒரு நிகழ்வை ஏற்படுத்தி, மாணவர்களின் கற்பனைத் திறனையும், பல பேருக்கு முன்பு தைரியமாக நின்று பேசும் திறனையும் வளர்ப்பது என்பது மிக பெரிய விஷயம். 

இம்மாதிரியான ஒரு நடைமுறையை நம்மூரில் நான் படிக்கின்ற காலத்தில் ஏற்படுத்தியிருந்தால், ஒரு வேளை நான் மேடை பேச்சாளராகி இருப்பேனோ, என்னவோ!!!!